படைப்புத் தொழிலும் சலித்துப்போன பரமன்
படியிறங்கி ஒரு நாள்
பூலோகத்தில் நடக்கும்
புத்தகச் சந்தைக்கு வந்தான்
மாலையில் கோர்க்கப் பட்ட ஒழுங்கற்ற
முத்துகள் போல் அடுக்கப் பட்டிருந்த
கடைகளினூடு நடக்கத் துவங்கினான்
ஆருடப் புத்தகங்களை
நமட்டுச் சிரிப்புடன் கடந்தவன்
அறிவில் புத்தகங்களில் மலைத்தான்
அரசியல் புத்தகங்களைப் புரட்டியவன்
கண்களில் தேவலோகத்தில் தேர்தல்
பயம் விரிய வேகமாய் முடிவிட்டு கடந்தான்
தத்துவ நூல்களைப் பார்த்துத் தலைசுற்றியவன்
மத நூல்களைப் பார்த்ததும் மயங்கி விழுந்தான்.
சூழ இருந்தோர் மயக்கம் தெளிவிக்க
எழுந்தவன் சென்ற இடம்
கவிதைச் சந்தைக்கு
கவிதைகள் சாந்தத்தைத் தர
கடவுளுக்கும் வந்தது கவிதை எழுதும் ஆசை
வேகமாக ஓடி கவிதை எழுதுவது எப்படி ?
வாங்கினான்…
வார்த்தைகள் வசப்படாது
ஏங்கினான்….
“காதலித்தால் கவிதை வரும் கண்டு கொண்டேன் உன்னாலே”
கானம் கேட்டு பரவசமானவன்
காதலிப்பது எப்படி ?
புத்தகம் கேட்டு வாங்கினான்
காதலிப்பதற்கு காதலி வேண்டுமே…
தேடத்துவங்கினான் கடவுள்..
இப்போது கடவுளுக்கு
அவசரமாக ஒரு காதலி வேண்டும்
கவிதை எழுதிப் பழக...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக