இக் குழந்தைகளின் பிறப்பிடம்

திங்கள், 22 மார்ச், 2010

கனவுத் தொழிற்சாலை......!

இருளடைந்தப் பாழ்வெளியில்
ஒருநாள் நான் படுத்திருந்த போது
கனவுகளின் தேவன் என்னைத்
தேடி வந்தான்

கனவுகளால் காயமுற்றிருந்த நான்
அவனைக் காண அஞ்சி
ஓட எத்தணித்தேன்

கதைகளில் வரும் பூதம் சுண்டு விரலால்
காட்டு மரங்களைத் தூக்கி வீசுவது போல்
என்னைத் தூக்கித் தன் தோளில்
போட்ட படி நடந்து கொண்டிருந்தான்

உலகின் நடுநாயகமாக உயர்ந்து நின்ற
கண்ணாடிக் கட்டிடத்தின்
முன் நின்று கொண்டிருந்தேன் நான்

கண்கள் நிறையக் கனவுகளோடு
பளிச்சிடும் உடைகளுடன்
மலர்ந்த முகம் நிறைய வியப்போடு
பலரும் உள்ளேச் சென்றவாறிருந்தனர்

சுழன்றடிக்கும் காற்று தரையில் கிடக்கும்
இலைத்துணுக்கை ஒரே மூச்சில் உயரேத்தூக்கி
சுற்றிக் கொண்டிருப்பதுபோல்
காற்றில்
சுற்றி வந்தேன் நான்

பிசிறே இல்லாது வெண்ணையில் வெட்டிச் செய்யப்பட்டது போல்
அமைக்கப் பட்டிருந்த ஒரு நீண்ட அறையில்
வரிசை மாறாமல் குவிக்கப் பட்டிருந்த பொறிகளுக்கிடையே
அமர்ந்திருந்தனர் அனைவரும்

மழுங்கச் சிரைத்த தலை மற்றும் முகமுமாய்
கண்களில் கூர்மையுடன் தோன்றிய ஒருவர்
விரல்களைக் காற்றில் வரைந்தபடி
விதவிதமான உருவங்களை உருவாக்கிக்
காட்டியவர்
கடைசியாகக் காட்டியது
அழகான ஒரு உலகம்
முன்னிருந்த ஒவ்வொருவரும்
அங்கே அரசர்களாகக்
கொலுவிருந்தனர்.

பார்த்துக் கொண்டிருந்தபோதே
அந்த உலகம் ஒன்று பலவாகப் பிரிந்து
ஒவ்வொருவர் தலைமேலும்
அமர்ந்து சுற்றத் துவங்கியது…

சுழலும் உலகம் சுழலுவிக்க
பொறியை இயக்கியபடியே
இயங்கத் துவங்கினர் அனைவரும்

வெளியே காலம் வேகமாய் மாறிக் கொண்டிருந்தது
உள்ளிருந்தவர்களோ எதுவும்
தெரியாது
இயங்கியபடியே இருந்தனர்

அவர்கள் தலைக்கு மேல் இருந்த
உலகின் ஒளி எப்போதெல்லாம்
குறைந்து கொண்டிருந்ததோ
அப்போதெல்லாம் அந்த மனிதர்
அழைக்கப்பட்டு
உலகம் ஒளியூட்டப் பட்டது

காலநிலை மாற்றத்தில் கண்ணாடிச்சுவர்
இன்னும் இன்னும் கெட்டிப்பட
வெளியே உலகுக்கும்
உள்ளே இருந்தோருக்கும் இடைவெளி
அதிகமாகிக் கொண்டிருந்தது

இயக்கத் துவங்கிய பொறிகள்
அசையத் துவங்கி
அசுர வளர்ச்சி பெற்று
ஒரு கட்டத்தில்
முன்னிருந்தோரைக் கடித்து
விழுங்கத் துவங்கின

சற்று நேரத்திற்குப் பிறகு
பார்க்கையில்
அந்த அறைமுழுதும்
வெறும் எந்திரங்களே
நிறைந்திருந்தன….!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக