இக் குழந்தைகளின் பிறப்பிடம்

செவ்வாய், 16 மார்ச், 2010

மனப்பறவை.......

சன்னலுக்கு வெளியே
சரிந்து விழும்
மழையின் துளிகள்...

ஓசை கேளா.., திறக்கவியலா
கதவுகளின்
பின்னால் நான்

ஏக்கப் பார்வையினூடே...
எழுந்து பறந்தது
ஒரு பறவை…

மூடிய கதவை முட்டித்திறந்து
முடியாத வானம் நோக்கி
முன்னேறுகிறது…

சொரியும் மழைப்பூக்களின்
விரியும் குளிர்க்காற்றில்

சிறகுகளில் பட்டுச் சிதறும்
வண்ணப் பொட்டுகளை
கண்களில் நிறைத்து…

இன்னும் …. இன்னும்
மேலே...

மேகங்கள் முத்தமிடும்
வானத்திரையில்...
தெறித்து விழும்...
கன்னிப் பூக்களைத்
தொட்டுத் தடவி..
சிட்டுச் சிலிர்த்தது…

கார்முகில் பிழிந்து
தார்நிறம் கலைத்து
மோர் நிற மேகத்தில்
இறகு துடைத்தது…

காரும் நீரும்
கலந்து நடத்திய
கும்ப மேளாவில்
களித்துக் கிடக்கையில்

இடியென்றொலித்த மணியால்
இதயத்தில் நிலநடுக்கம்…

“என்னப்பா… முடிச்சாச்சா…”
……………………………
“அனுப்பி வை…”

நிலைகுலைந்த பறவை
நிலம் நோக்கி வீழ்ந்து
விழி மூட….
விழி திறந்தது பிறிதொரு கழுகு…
....................................

“அனுப்பியாயிற்று…”
...............................

சன்னலுக்குப் பின்னால்

முகிலும் இல்லை…
மழையும் இல்லை…

பறவை மட்டும் ஒரு ஓரத்தில்
தவமிருக்கிறது.....

அந்தக் கண்ணாடிக் கூட்டுக்குள்
அடைபட்ட படியே…

மீண்டுமொரு மழைக்காக…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக