இக் குழந்தைகளின் பிறப்பிடம்

புதன், 31 மார்ச், 2010

நினைவலைகள் : விலாங்குமீன் வேட்டையும் தவமிருந்த பாம்புகளும்....

நாளுபூரா வெயிலடிச்சாலும் தாங்கிக்கிடலாம் ஆனா ஒரு நாள் மழை பெஞ்சா மனுசனால தாங்க முடியுதா?
வெயிலடிக்கும் போது மழை பெய்யாதா மழை பெய்யாதாணு வானத்த பாக்குற எல்லாரும் மழை பெய்ய ஆரம்பிச்சதும் ரொம்ப சந்தோசப்படுவாங்க… ஆனா அதே மழை ஒரு நாள் முழுக்க பெஞ்சா அவ்வளவு தான் அடடடே என்ன மழை எப்ப பாரு சொத சொதனு… திட்ட ஆரம்பிச்சுடும் சனங்க.
அதுலயும் இந்த ஆனி மாசம் வந்துட்டாலே தென்மேற்கு பருவமழை ஆரம்பிச்சுடும். வைகாசி மாச கடைசிலேயே மழை வந்துடும். ஆனா இந்த ஆனி மாசத்து மழை பெஞ்சோம் நின்னோம்னு நிக்கிறதுல்ல எப்ப பாரு அருவி பக்கத்தில தெறிக்கிற சாரல் மாதிரி துளி துளியா விழுந்துட்டே இருக்கும்.

இந்தளவுக்கு இரைச்சல் இல்லாத அந்த காலத்துல மழை வர்றத தூரத்தில இருக்குற கடலோட சத்தத்த வச்சே கண்டு புடிச்சுடுவாங்க… ஒரு பழமொழி வேற இருக்கு முட்டத்து கடலடிச்சா முத்தம் தெவராம மழை பெய்யும்னு…

அடுத்தது ஐப்பசி மாச மழை அது அடிச்சா ஒரே அடிதான். அந்த மழைல மலைமேல பெய்யிற மழையால பேச்சிப்பாற அணை ஒரே வாரத்துல நெறஞ்சிரும். அதுக்கு மேலயும் மழைபெஞ்சின்னா மறுகால் தொறந்து விட்டுருவானுவ.. அந்த மறுகால் தண்ணி மழத்தண்ணி எல்லாம் சேந்து வள்ளியாத்துலயும் கோதையாத்துலயும் வெள்ளமா ஓடும். எங்க எங்க ஆத்தங்கரை எல்லாம் அபகரிச்சி கட்டடம் கட்டி வச்சிருக்கானுவளோ எல்லாத்தயும் எங்க எல்லைக்குள்ள எவண்டா கட்டடம் கட்டுனதுணு ஒட்டு மொத்தமா அடிச்சிட்டு போயிடும்… அப்பதான் நில அளவுக்காரங்களுக்கே தெரியும் இங்க வர ஆறு இருக்காண்ணு

அடபாருங்க என்ன சொல்ல வந்து என்னத்த சொல்லிட்டுருக்கண்ணு… கன்னியாகுமரி மாவட்டம் மலையும் கடலும் இடைப்பட்ட நிலப்பரப்பு கொஞ்சமா இருக்குறதால மலைல பெய்யிற மழைத்தண்ணி எல்லாம் நேரா கடலுக்கு போயிடும். அதனால அங்கங்கே நிறைய குளங்கள் இருக்கும். பெருசா ஏரினு சொல்லுற அளவுக்கு இல்லணாலும் சின்னதும் பெருசுமா நிறைய குளங்கள் இருக்கும்.

ஆத்துலருந்து வாய்க்கால்கள் வழியா தண்ணி ஒருகுளத்துக்கு போகும் அதுநிறைஞ்சதும் அங்கருந்து அடுத்த குளம் அங்கருந்து இன்னொண்ணு இப்படியே எல்லா குளங்களும் ஒண்ணுக்கொண்ணு தொடர்பு இருக்கும். ஒவ்வொரு குளத்துக்கும் ஒரு பாசனப் பரப்பு இருக்கும். இத ஏலாணு சொல்லுவாங்க … இந்த குளங்கள் ஒவ்வெண்ணோட பேர வச்சி ஒவ்வொரு கதை சொல்லலாம் செட்டி குளம், செறுவெட்டி குளம், குண்டு வெட்டி , பெருங்கோடு, காட்டு குளம் இப்படினு…

இந்த மழை வந்துச்சுண்ணா மனுசங்க எந்த அளவுக்கு சந்தோசப்படுவாங்களோ தெரியாது ஆனா இந்த குளத்துல கெட்டுபட்டு கெடக்குற தண்ணில கெடக்க மீனுவளுக்கு இருக்குற சந்தோசம் எழுத்துல எழுதிர முடியாது…

சந்தேகம்னா நல்லா மழை பெய்யிற நேரத்தில கொளத்தங்கரைல போய் நின்னு பாருங்க.. அப்படியே பெய்யிற மழைக்குள்ள பூந்து வானத்துக்கு போற மாதிரி துள்ளும் இந்த கெண்ட மீனுவ எல்லாம்.

ஆனா இந்த விலாங்கு மீனு இருக்குதில்ல இதுக பண்ற வேலையே வேற… மழை பெஞ்சதும் வாய்க்கா வழியா புதுத்தண்ணி குளத்துல வந்து சேர்றது தான் தாமசம் அந்த வாசனைய புடிச்சிட்டு குளத்துல அடியாழத்துல இருக்குற இவுக ஒட்டு மொத்தமா வாய்க்காலுக்கு வந்துடுவாக…

விலாங்கு மீனப்பத்தி கேட்டுருப்பீக… இரட்ட வேசம் போடுறவியள வெளவாலுண்ணு சொல்லுற மாதிரி விலாங்குண்ணும் சொல்லுவாவ… பாம்பு போலவே இருக்கும். வால வச்சிதான் கண்டு புடிக்கணும். அதான் சொல்லுவாவ பாம்புக்கு தலையும் மீனுக்கு வாலும் காட்டுற விலாங்கு மீனுணு…

இப்படி வாசம்புடிச்சுட்டு வாய்க்காலுக்கு வந்த மீனுவ அப்படி அங்கே நிக்கிறதில்ல அப்படியே வாய்க்கா வழியா மேல போக ஆரம்பிக்கும்ங்க… விலாங்கு மீன் வெறும் புழு மட்டும் தின்னுறதில்ல சின்ன சின்ன தவளைய கூட தின்னுடும். அதப்புடிக்கணும்னா சின்ன தவளைக் குட்டிகளத்தான் தூண்டில்ல மாட்டி போடணும். விலாங்கு மாட்டுதோ என்னவோ நாங்க விலாங்குக்கு தூண்டில் போட்டோம்னா ஒரு பாம்பாவது அடிக்காம விட்டதில்ல…

சரி கதக்கி வருவோம்… இப்புடி வாய்க்கா வழியா மேலே மேலே போய்கிட்டுருக்கிற விலாங்கு மீன் குளத்தையே மறந்துடும். மழைபெய்யிறது நின்னோடன வாய்க்கால்ல தண்ணி வரது கொறஞ்சிரும்… அங்கங்க குண்டு குண்டா இருக்கிற இடத்துல கெட்டுபட்டு கெடக்குற தண்ணில பக்கத்தில இருக்குற பொந்துகள்ல போய் பூந்துக்கும்.

இப்புடி மழை தீந்த அடுத்த நாள் வெள்ளம் வடிஞ்சோடன தான் நம்ம வேட்ட ஆரம்பிக்கும். விலாங்கு புடிக்க கெளம்பிருவோம்… ஆனா நமக்கெல்லாம் மீன் புடிக்க போனா மீன் கெடக்கிதோ இல்லியோ.. அண்ணிக்கி வீட்டுல நல்ல புளிய மிளாறு பூசை நிச்சயம். அதனால வீட்டுக்கு தெரியாம ஒளிச்சி ஓடிடுறது.

அந்த வருசம் இப்புடி தான் ஒரு வாரமா பயங்கற மழை. பள்ளிகூடம் எல்லாம் அடச்சிட்டாங்க… ஒரு வாரமா பெய்த மழை ரெண்டு நாளாதான் வெறிச்சிருக்கு.. விடுவாங்களா நம்மாளுங்க காலங்காத்தால கஞ்சிய குடிச்சமோ பல்லு தேச்சமோ இல்லியோ… திட்டம் போட்டுட்டு கெளம்பியாச்சு.. எங்க ஊருப்பக்கமா ஓடுற சானல்லருந்து பிரியிற வாய்க்கா வழியா இறங்கியாச்சு… வரப்பு வழியாவே போய்கிட்டுருக்கோம்…

ஆனா மழை பெஞ்ச அடுத்த நாளு வயக்காட்டுக்கு போற சுகம் இருக்குல்ல அடாடா… அதுலயும் தென்னந்தோப்பும் தோட்டங்க வயலு எல்லாம் பச்ச பச்சையா கண்ணுக்கு குளு குளுணு இருக்கும். தண்ணி தண்ணி தண்ணி தான் வாய்க்கா வயலு தோப்பு எல்லா பக்கமும்… மரத்தில இலையில ஒட்டிட்டுருக்குற தண்ணி காத்துல ஆடியோ இல்லண்ணா கூட்டுக்காரன் செய்யிற விசமத்துல ஆடியொ உடம்புல உளும்போது அந்த குளுருல உடம்பு சிலுத்துக்கும் பாருங்க… அதெல்லாம் அனுபவிச்சாதாங்க புரியும்.

என்னா விசமம் பண்ணுவானுகணு கேக்குறியளா? வசமா வந்து தோள்ல கையபோட்டுட்டு லேய் மைனா கூடு கட்டி குஞ்சு பொரிச்சிருக்கு பாக்குரியால ணு கூட்டிட்டு போவானுவ போய் தோதா ஒரு மரத்துக்க கீழ நிக்க வெச்சிட்டு தூரத்தில தெரியிற மரக்கிளைய காட்டி அதுல பாருலம்பானுவ நமக்கு ஒண்ணம் தெரியாது. இருந்தா தான தெரியிறதுக்கு… உத்து உத்து பரத்துட்டுருப்போம் இதுதான் சாக்குண்ணு … தள்ளிப்போய் நின்னுட்டு கொப்பு நுனிய புடிச்சி உலுப்பி உட்டுருவானுவ… அடிச்சி பொரண்டு ஓடுவோம்…

இதே கூத்து அடுத்த நாளு அவனுக்கு வேற உருவத்துல இருக்குமுல்ல. பள்ளிகொடத்துல தின்னுட்டு தின்ன முடியாத சோத்த ஒரு இடத்துல தட்டி வச்சிருறது மறு நாளக்கி அந்த இடம் பூரா ஒரே எறும்பா இருக்கும். அதே மைனா என்ன இந்த தடவ கிளியா இருக்கும். கூட்டிட்டு போய் எறும்பு கூட்டத்துல நிக்க வச்சிட்டு ஓடிடுறது… நம்மளால முடியலனாலும் எறும்ப வச்சி சாதிச்சுடுவோம்ல…

அடபாருங்க விலாங்க புடிக்க போனா எறும்புல போய் நிக்கிது.. என்னத்த செய்ய ஒண்ணா ரெண்டா மனசுக்குள்ள இருக்கிறது … ஒண்ண எழுத ஆரம்பிச்சா எல்லாம் வந்து நின்னுகிட்டு என்ன எழுது என்ன எழுதுணு முட்டுதுக…

வழில எங்க மாமாவும் சேந்துகிட்டாரு இப்ப எனக்கு கொஞ்சம் தைரியம் வந்துடுச்சி… வீட்டுல கேட்டா மாமா கூட போனேனு சொல்லிரலாமுல்ல. வாய்க்கால்ல போம்போதே.. மாமா தவள குட்டி நாலு புடிச்சிகிட்டாரு. ஒண்ண எடுத்து தூண்டில்ல மாட்டிட்டு ஒவ்வொரு பொந்தா போட்டுட்டுருந்தாரு. மனசுக்குள்ள ஒரு பக்கம் பாம்பு கீம்பு வந்துடப்போவுதுணு பயம். ஆனா காட்டிக்க முடியுமா?

குளத்துல தூண்டில் போட்டா பாம்பு வந்தாலும் பயமில்ல ஏண்ணா தண்ணிப்பாம்பா தான் இருக்கும். அதுக்கு தான் வெசம் கெடயாதே.. அதுகிட்ட தானே நாம வீரத்த காட்டுவோம். ஆனா வாய்க்கால அப்புடியா எந்த புத்துல எந்த பாம்பு இருக்கும்ணு யாருக்கு தெரியும்.

ஒரு பக்கம் நடுங்கிட்டே இருந்துச்சு மாமா வந்ததுனால அவரு வாய்க்காவுக்குள்ளே எறங்க உடல… கரைல சாக்குப் பைய வச்சுட்டு நின்னுட்டுருந்தன். ஒண்ணும் மாட்டுறாப்புல இல்ல. அத உட்டுட்டு அப்புடியே வாய்க்கா வழியா அடுத்த குண்டுக்கு போனோம் அங்கயும் ஒண்ணுமில்ல … அப்புடியே அடுத்த குண்டுக்கு போனோம்…

இப்புடியே ஒவ்வொரு குண்டா போய் போய் கடைசில வாய்க்கா வழியாவே அடுத்த கொளத்துக்கு வந்து சேந்துட்டோம். அது பெருங்கோட்டு கொளம். கொஞ்சம் பெரிய கொளம்தான். அந்த கொளத்துல அவ்ளோ வெள்ளம் நெறஞ்சி நான் அதுவர பாத்தது கெடயாது. மறுகால் பாஞ்சிட்டு இருந்திச்சி.. மறுகால்லேயெ பயங்கர வெள்ளம்.

மறுகால்னா (Overflow) தண்ணி ஒரு மட்டத்துக்கு மேல போன கரை உடச்சிடக்கூடாதுண்ணு ஒரு பக்கம் கரை மட்டத்துக்கு கொஞ்சம் தாழ்வா கட்டி வச்சிருப்பாங்க. சாதாரணமா அதில ஏறி அடுத்த பக்கம் போற மாதிரி படிக்கட்டு போல கெட்டி வச்சிருக்கும்.

திடீர்னு மாமா தோள பிடிச்சி கூட்டிட்டு போய் அந்த காட்சிய காட்டுனாரு. என் வாழ்க்கைல அப்புடி ஒரு காட்சி கண்டதில்ல இத எழுதுறதுக்கு தூண்டுதலும் அதுதான்.

அங்க மறுகால் வழியா தண்ணி பாஞ்சிட்டுருக்கு கீழ வாய்க்கால்லருந்து மீனுக எல்லாம் துள்ளி திரும்ப குளத்துக்கு வரப்பாத்துட்டுருக்கு. இந்த மீனுகள புடிக்கிறதுக்காக மறுகாலோட ரெண்டு பக்க படிக்கட்டுல ரெண்டு பாம்புக தவமிருந்துட்டுருந்தது. அதாவது படுத்திருக்கல… வால் பக்கம் தரையில ஒரு சுத்து மீதி உடம்பு முழுக்க ஒரு கொடி மாதிரி காத்துல ஆடிட்டுருந்துது… கீழருந்து மீன் துள்ளி மேல வரும்போது குறிபாத்து லபக். இந்த ரெண்டு பாம்புக பத்தாதுணு மேல ஒரு மீன்கொத்தி… வாய்க்காலுக்குள்ள ஒரு கொக்கு… அட.. என்ன ஒரு அபூர்வ காட்சி போங்க. ஒரு ஜீவமரணப் போராட்டம் நடந்துட்டுருந்துச்சு இயற்கையோட வெளையாட்டு.

மீனுக்கு குளத்துக்குள்ள போணும். ஆனா கொக்குகிட்ட மாட்ட கூடாது அது கண்ணுல படாம மறுகால் மட்ட உயரத்துக்கு துள்ளணும். துள்ளி மேலருந்து பாயுற தண்ணியோட வேகத்த எதுத்து நீந்தி குளத்துக்குள்ள போய்டணும். அந்த நேரத்துக்குள்ள இடையில தவமிருக்குற பாம்புகள்ட்ட மாட்ட கூடாது. அதே போல தலைக்கி மேல பறக்குற மீன்கொத்திகிட்டயும் மாட்டகூடாது.

பாம்புக்கு மீனப் புடிக்கணும். மீனு துள்ளி வரும்போது அது வர வேகத்த கணிச்சி அது வர உயரத்த பாத்து தண்ணிக்குள்ள மூழ்கி குளத்துக்குள்ள போறதுக்குள்ள புடிச்சாகணும்.

மேல பறக்குற மீன்கொத்திக்கோ... இந்த பாம்புகளோட போட்டி போட்டு மீனப்புடிக்கணும்.

இன்னிக்கி நெனச்சாலும் கண்ணுக்குள்ள நிக்கிற அபூர்வ காட்சி அது. இண்ணிக்கி வர ஒரு புகைப்படகருவி இல்லாம போச்சேனு கவலைப்படுறதும் அதுக்கு தான்.

கடைசியா அண்ணிக்கி எவ்வளவு தான் அலஞ்சும் விலாங்கு மீன் மட்டும் கெடைக்கவே இல்ல. ஆனா எனக்கு மீன் கெடைக்கலங்குற கவல கொஞ்சம் கூட இல்ல. இந்த காட்சியே மனசுக்குள்ள நெறஞ்சிருந்துது.

மீன் கெடைக்காததுக்கு காரணம் நாங்க வெள்ளம் சரியா வடியிறதுக்குள்ள போய்ட்டோமாம். ஒரு வாரம் பெஞ்ச பெருமழை. வெள்ளம் வடிய கொறஞ்சது மூணு நாளாவது வேணுமாம். மாமா அப்புறமா பேசும் போது ஒரு நாள் சொன்னாரு.

திங்கள், 22 மார்ச், 2010

கனவுத் தொழிற்சாலை......!

இருளடைந்தப் பாழ்வெளியில்
ஒருநாள் நான் படுத்திருந்த போது
கனவுகளின் தேவன் என்னைத்
தேடி வந்தான்

கனவுகளால் காயமுற்றிருந்த நான்
அவனைக் காண அஞ்சி
ஓட எத்தணித்தேன்

கதைகளில் வரும் பூதம் சுண்டு விரலால்
காட்டு மரங்களைத் தூக்கி வீசுவது போல்
என்னைத் தூக்கித் தன் தோளில்
போட்ட படி நடந்து கொண்டிருந்தான்

உலகின் நடுநாயகமாக உயர்ந்து நின்ற
கண்ணாடிக் கட்டிடத்தின்
முன் நின்று கொண்டிருந்தேன் நான்

கண்கள் நிறையக் கனவுகளோடு
பளிச்சிடும் உடைகளுடன்
மலர்ந்த முகம் நிறைய வியப்போடு
பலரும் உள்ளேச் சென்றவாறிருந்தனர்

சுழன்றடிக்கும் காற்று தரையில் கிடக்கும்
இலைத்துணுக்கை ஒரே மூச்சில் உயரேத்தூக்கி
சுற்றிக் கொண்டிருப்பதுபோல்
காற்றில்
சுற்றி வந்தேன் நான்

பிசிறே இல்லாது வெண்ணையில் வெட்டிச் செய்யப்பட்டது போல்
அமைக்கப் பட்டிருந்த ஒரு நீண்ட அறையில்
வரிசை மாறாமல் குவிக்கப் பட்டிருந்த பொறிகளுக்கிடையே
அமர்ந்திருந்தனர் அனைவரும்

மழுங்கச் சிரைத்த தலை மற்றும் முகமுமாய்
கண்களில் கூர்மையுடன் தோன்றிய ஒருவர்
விரல்களைக் காற்றில் வரைந்தபடி
விதவிதமான உருவங்களை உருவாக்கிக்
காட்டியவர்
கடைசியாகக் காட்டியது
அழகான ஒரு உலகம்
முன்னிருந்த ஒவ்வொருவரும்
அங்கே அரசர்களாகக்
கொலுவிருந்தனர்.

பார்த்துக் கொண்டிருந்தபோதே
அந்த உலகம் ஒன்று பலவாகப் பிரிந்து
ஒவ்வொருவர் தலைமேலும்
அமர்ந்து சுற்றத் துவங்கியது…

சுழலும் உலகம் சுழலுவிக்க
பொறியை இயக்கியபடியே
இயங்கத் துவங்கினர் அனைவரும்

வெளியே காலம் வேகமாய் மாறிக் கொண்டிருந்தது
உள்ளிருந்தவர்களோ எதுவும்
தெரியாது
இயங்கியபடியே இருந்தனர்

அவர்கள் தலைக்கு மேல் இருந்த
உலகின் ஒளி எப்போதெல்லாம்
குறைந்து கொண்டிருந்ததோ
அப்போதெல்லாம் அந்த மனிதர்
அழைக்கப்பட்டு
உலகம் ஒளியூட்டப் பட்டது

காலநிலை மாற்றத்தில் கண்ணாடிச்சுவர்
இன்னும் இன்னும் கெட்டிப்பட
வெளியே உலகுக்கும்
உள்ளே இருந்தோருக்கும் இடைவெளி
அதிகமாகிக் கொண்டிருந்தது

இயக்கத் துவங்கிய பொறிகள்
அசையத் துவங்கி
அசுர வளர்ச்சி பெற்று
ஒரு கட்டத்தில்
முன்னிருந்தோரைக் கடித்து
விழுங்கத் துவங்கின

சற்று நேரத்திற்குப் பிறகு
பார்க்கையில்
அந்த அறைமுழுதும்
வெறும் எந்திரங்களே
நிறைந்திருந்தன….!

செவ்வாய், 16 மார்ச், 2010

மனப்பறவை.......

சன்னலுக்கு வெளியே
சரிந்து விழும்
மழையின் துளிகள்...

ஓசை கேளா.., திறக்கவியலா
கதவுகளின்
பின்னால் நான்

ஏக்கப் பார்வையினூடே...
எழுந்து பறந்தது
ஒரு பறவை…

மூடிய கதவை முட்டித்திறந்து
முடியாத வானம் நோக்கி
முன்னேறுகிறது…

சொரியும் மழைப்பூக்களின்
விரியும் குளிர்க்காற்றில்

சிறகுகளில் பட்டுச் சிதறும்
வண்ணப் பொட்டுகளை
கண்களில் நிறைத்து…

இன்னும் …. இன்னும்
மேலே...

மேகங்கள் முத்தமிடும்
வானத்திரையில்...
தெறித்து விழும்...
கன்னிப் பூக்களைத்
தொட்டுத் தடவி..
சிட்டுச் சிலிர்த்தது…

கார்முகில் பிழிந்து
தார்நிறம் கலைத்து
மோர் நிற மேகத்தில்
இறகு துடைத்தது…

காரும் நீரும்
கலந்து நடத்திய
கும்ப மேளாவில்
களித்துக் கிடக்கையில்

இடியென்றொலித்த மணியால்
இதயத்தில் நிலநடுக்கம்…

“என்னப்பா… முடிச்சாச்சா…”
……………………………
“அனுப்பி வை…”

நிலைகுலைந்த பறவை
நிலம் நோக்கி வீழ்ந்து
விழி மூட….
விழி திறந்தது பிறிதொரு கழுகு…
....................................

“அனுப்பியாயிற்று…”
...............................

சன்னலுக்குப் பின்னால்

முகிலும் இல்லை…
மழையும் இல்லை…

பறவை மட்டும் ஒரு ஓரத்தில்
தவமிருக்கிறது.....

அந்தக் கண்ணாடிக் கூட்டுக்குள்
அடைபட்ட படியே…

மீண்டுமொரு மழைக்காக…

திங்கள், 1 மார்ச், 2010

கடவுளும் காதலும்...!

படைப்புத் தொழிலும் சலித்துப்போன பரமன்
படியிறங்கி ஒரு நாள்
பூலோகத்தில் நடக்கும்
புத்தகச் சந்தைக்கு வந்தான்

மாலையில் கோர்க்கப் பட்ட ஒழுங்கற்ற
முத்துகள் போல் அடுக்கப் பட்டிருந்த
கடைகளினூடு நடக்கத் துவங்கினான்

ஆருடப் புத்தகங்களை
நமட்டுச் சிரிப்புடன் கடந்தவன்

அறிவில் புத்தகங்களில் மலைத்தான்

அரசியல் புத்தகங்களைப் புரட்டியவன்
கண்களில் தேவலோகத்தில் தேர்தல்
பயம் விரிய வேகமாய் முடிவிட்டு கடந்தான்

தத்துவ நூல்களைப் பார்த்துத் தலைசுற்றியவன்

மத நூல்களைப் பார்த்ததும் மயங்கி விழுந்தான்.

சூழ இருந்தோர் மயக்கம் தெளிவிக்க

எழுந்தவன் சென்ற இடம்
கவிதைச் சந்தைக்கு

கவிதைகள் சாந்தத்தைத் தர
கடவுளுக்கும் வந்தது கவிதை எழுதும் ஆசை

வேகமாக ஓடி கவிதை எழுதுவது எப்படி ?
வாங்கினான்…
வார்த்தைகள் வசப்படாது
ஏங்கினான்….

“காதலித்தால் கவிதை வரும் கண்டு கொண்டேன் உன்னாலே”
கானம் கேட்டு பரவசமானவன்

காதலிப்பது எப்படி ?

புத்தகம் கேட்டு வாங்கினான்

காதலிப்பதற்கு காதலி வேண்டுமே…

தேடத்துவங்கினான் கடவுள்..

இப்போது கடவுளுக்கு

அவசரமாக ஒரு காதலி வேண்டும்

கவிதை எழுதிப் பழக...