இக் குழந்தைகளின் பிறப்பிடம்

புதன், 27 அக்டோபர், 2010

வார்த்தைகள் வழியும் கால்வாய்...!

இருமனங்களுக்கு இடையில்

ஓருமனதாய்

வெட்டப்பட்டதொரு

கால்வாய்



தூரப்பார்வையில் ஒரேமாதிரித்

தென்பட்ட இரு கரைகளின்

ஏற்றத் தாழ்வுகள் கிட்டப்பார்வையில்

கண்டறியப் பட்டன



வலகரை உயர்ந்த சில இடங்களும்

இடகரை உயர்ந்த சில இடங்களும்

பொதுவில் ஒரு ஒற்றுமையை

புதிதாய் உருவாக்கிக் கொடுத்தது



புதிதாய் வெட்டப் பட்டதால்

தடங்கித் தயங்கி ஊரத்துவங்கிய

வார்த்தைகள்

சிறு சிறு தடைகள்

அடித்துச் செல்லப் பட்டதும்

தடங்கலின்றிப் பாயத்துவங்கி

இருகரை தொட்டுயரத் துவங்கின



அபாய நிலை வரும் முன்னரே

அணை போட்டுத் தடுத்தது அரசு

அடுத்த அறிவிபு்பு வரும் வரை

தற்காலிகமாகத் தள்ளிப் போடப்பட்டது

அணைத் திறப்பு



அணைகரையை முட்டிய வார்த்தைகள்

அலைபேசி வழியாய்

கசியத் துவங்கின





பெரிய கால்வாயின்

நடுப்பகுதியில்

ஒரு சிறு ஓடையாகத்

தன்னைச் சுருக்கிக் கொண்டபடி

வளைந்தும் நெளிந்தும்

வழிந்து கொண்டிருந்தன

வார்த்தைகள்.


அரசுக்குத் தெரியாமல் அவ்வப்போது

கள்ளத்தனமாய்த் திறக்கப்பட்ட

அணையிலிருந்து

அவசரமாய் வெளியேறத் துடித்த

வார்ததைகளின் வேகம்

கரைகளை அசைத்துப் பார்த்தது


வேக வார்த்தைகள்

வழிந்து தீர்ந்த

அந்த அழகிய நடுநிசியில்



இரு கரைகளுக்குமி்டையே

மெளன ஊற்று

பீறிட்டுக் கிளம்பியது



சத்தமே இல்லாத வார்த்தைகள்

இரு கரைகளினிடையே

வந்து போய்க் கொண்டிருந்தன

யாரும் அறியாமலே....!

புதன், 6 அக்டோபர், 2010

தொடரும் மழை...!

காலைத் தூவானம்
கண்களை நனைத்திருக்க
மாலை மழையால்
கண்கள் நிறைந்து
இதயம் நனைந்து கொண்டிருக்க…
வெளியே..
இன்னும் தொடர்கிறது மழை…!