இக் குழந்தைகளின் பிறப்பிடம்

ஞாயிறு, 2 மே, 2010

குறட்டையில் கலையும் கவிதைகள்….!

தாழிடப்படாமல் சாத்தப்பட்டிருந்த
கதவுக்குப் பின்னால்
அடைக்கப் பட்டிருந்த குளிருக்கு
நடுவே சன்னமாய் உறுமிக் கொண்டிருந்த
கணிணியில் முடக்கப்பட்டிருந்தன
என் கனவுகள்…

கவிழ்ந்திருந்த தலை கவிழ்ந்த படியேப்
பார்த்துக் கொண்டிருந்த அந்த மிகச்சிறு
கணப்பொழுதில் காலம்
அன்றைய இரவின் மணி ஒன்பதைக் கடந்தது

கணிணி மடிக்கப்பட்டது

கம்பிகள் சுருட்டப் பட்டன

பை சுமக்கப் பட்டது

சாவிகள் எடுக்கப் பட்டன

கதவு பூட்டப் பட்டது

கால்கள் தளர் தாளம் போடத் துவங்கின

பால் மழை வழிந்த
கறுப்பு வீதியில்
பாதம் பதிக்கையில்

முடித்தவைகளும்
முடியாதவைகளும்
முடிக்காதவைகளுமாகிய குப்பைகள் அத்தனையும்
துடைத்தெறியப் பட்டன

இருந்த பாரம் குறைந்ததும்
கொண்டு வந்து கொட்டப் பட்டன இன்னுமொரு
வண்டிக் குப்பைகள்…

மேலிருந்த குப்பையை விலக்கித் தேடிய கைகளுக்குச்
சட்டென்று கிடைத்தது…
“ஆமைக் கூட்டிற்குள் அடைக்கப்பட்ட தலையாய்
அவ்வப்போது எட்டிப் பார்த்த…”

‘ கண்காட்சி ஆமை எப்போதுமே தலையை வெளியே வைத்து சுற்றிக் கொண்டிருந்ததே…’
தட்டிப் பார்க்கையில் பொருள் உள்ளே உடைந்து போயிருக்க
ஓரம் வைத்துவிட்டு
கைவிட்டுத் துழாவிய போது
கிடைத்தது இன்னொன்று…

“நத்தைக் கூட்டின் ஓடுகளுக்குள்….
சிறைப்பட்ட …………..”
இழுக்கும் போதே கிழிந்து போனது
இற்றுப் போயிருந்த வார்த்தைகள்

“முழுமானை விழுங்கிய
மலைப்பாம்பின் பசியாக
எப்போதாவது வந்து
எட்டிப்பார்த்துப் போகும்
அவனுள்ளிருக்கும் கலை….”

உரசிப் பார்த்து தங்கமில்லை என்றாலும்
புதுச்சரக்கு என்றுப் பத்திரப் படுத்தியது மனது.

இதற்குள்ளேப் பாதங்கள் படியேறி
நின்றுவிட

சாவி நுழைக்கப்பட்டது

கதவு திறக்கப் பட்டது

விளக்கு எரிந்தது

வெள்ளுடை பறந்தது

அடுப்பின் ஓசையில்
அசுரன் விழித்தெழ
மட்கிய குப்பைகளுடன்
மண்மூடிப் போயின
புதிய சருகுகளும்

பசியாறி வந்து
படுத்துக் கிடக்கையில்
கிளறிய குப்பையின்
பொறுக்கிய வார்த்தைகள்
ஊரத் துவங்க

உதறிப் போர்த்திய போர்வைக்குள்
புரண்டு படுக்கையில்
கேட்கும் குறட்டையொலின்
அதிர்வில்

கலைந்து பறப்பவை காற்று மட்டுமல்ல
இறந்து போன என்
கவிதைக் கருக்களும் …!

5 கருத்துகள்: