குஞ்சாலம் என்று எங்கள் வட்டார வழக்கில் வழங்கப்படும் ஊஞ்சல் என் நினைவில் இன்று ஆடியது ஒரு தற்செயலாக இருக்கலாம். ஆனால் ஊஞ்சலின் நினைவுகள் என் உள்ளத்தில் மிக ஆழமாகப் பதிந்துள்ளன.
ஊஞ்சல் என்றதும் பலருக்கும் பூங்காக்களில் நான்கு கம்பிகள் நடப்பட்டு அவற்றின் குறுக்கேக் கட்டப்பட்ட கம்பியில் தொங்கிக் கொண்டிருக்கும் துருப்பிடித்த இரும்புப் பலகைகள் தான் நினைவுக்கு வரும்.
துருவேறாத பலகைகளில் சிறுவர்கள் சென்று அமர்ந்து ஆடிக் கொண்டிருப்பார்கள். பெரியவர்கள் நின்று பார்த்து விட்டுச் செல்வதோடு சரி. மனதில் ஆசையிருந்தாலும் போய் அமர்ந்து ஆடும் அளவிற்குத் தைரியம் இருப்பதில்லை. பார்த்த மகிழ்ச்சியிலேயேச் சென்று விடுவது வழக்கம்.
பெரியவர்களானதும் நாம் இழந்து கொண்டிருப்பவைகளில் முக்கியமான ஒன்றாக நான் சொல்வது, வளர்ந்ததுமே குழந்தைகளாக நாம் இருக்கும் போது கொண்டிருந்த பல பழக்கங்களையும் விட்டுவிடவேண்டியிருப்பது. நமக்குப் பிடித்திருக்கிறதோ இல்லையோ சமுதாயத்தின் பார்வைக்காக நமது குழந்தை மனதையும் இரசனையையும் விட்டுத் தொலைக்க வேண்டியுள்ளது.
வயல்வெளியில் நடந்து கொண்டிருப்போம் வரப்பில் அமர்ந்தபடி வாய்க்காலுக்குள் கால்களை நுழைத்து காலைப் பனியைச் சுமந்தபடி வந்து கொண்டிருக்கும் குளிர்நீருக்குள் அளைந்து கொண்டிருக்க விருப்பமிருக்கும் ஆனால் யாராவது ஏதாவது சொல்லிவிடுவார்களோ என்ற பயமிருக்கும்.
குளக்கரையில் இறங்கி கணுக்கால் வரை புதையும் சகதிக்குள் இறங்கி பூத்துக்கிடக்கும் தாமரையைப் பறித்து விட்டு அந்தச் சகதியை மேலும் மேலும் மிதித்து மிக மிக நுண்ணிய சகதி விரல் இடுக்குகள் வழியாக நுழைந்து வெளியேறுவதை இரசிக்கும் ஆசை மிகும்.
ஆனால் முடிவதில்லை...
இப்படி எத்தனையோ அழகுகளை வளர்ந்ததும் தவறவிட்டுக் கொண்டிருக்கிறோம் அப்படிப்பட்ட இன்னொரு நிகழ்வுதான் ஊஞ்சல்.
நாம் ஆடுவதைத் தவிர்த்து நமது குழந்தைகளை மட்டும் ஆடவிட்டு அதுவும் தவணை முறையில் ஆண்டுக் கொருமுறையோ அல்லது ஆண்டுகளுக் கொருமுறையோ வாய்ப்பளிக்கும் இந்த ஊஞ்சலானது நமது
கிராமங்களில் ஒரு ஊஞ்சல் திருவிழாவாகவே கொண்டாடப் பட்டிருந்தது என்றால் நம்ப முடியுமா?
அதுவுமல்லாமல் வீடுகளின் திண்ணையில் அல்லது முன்னறையில் ஊஞ்சல் போடுவதற்கென்றே தனியாக உத்திரங்களும் தூண்களும் நிறுத்தியிருந்த அமைப்புகளை நாம் இன்றும் பல திரைப்படங்களில் காணலாம்.
நாட்டாமை திரைப்படத்தில் நாட்டாமை அமர்ந்திருக்கும் ஊஞ்சலும் ஒரு கதாப்பாத்திரமே.
அட மனிதர்களை விடுங்கள் கடவுள்களையே நாம் ஊஞ்சலில் ஆடவைத்து வழிபட்டுக் கொண்டிருக்கிறோம்.
நான்கு முனைகளிலும் வளையம் கோர்க்கப்பட்டு அவற்றில் கட்டப்பட்ட சங்கிலிகளில் தொங்கும் பலகை பெரும்பாலும் வீடுகளில் நிரந்தரமாகத் தொங்கவிடப்படும் ஊஞ்சல்கள். இது போக ஆண்டில் சில மாதங்கள் பயன்படுத்தப் படும் உடனடி ஊஞ்சல்கள் தான் இங்கே நான் சொல்லப் போவது.
நவம்பர் டிசம்பர் மாதங்களில் (மாதங்கள் சரிதானா? எனக்கு சந்தேகமாயிருக்கிறது தெரிந்தவர்கள் இருந்தால் உறுதிப்படுத்துங்களேன்) ஊரில் யார் வீட்டில் முதலில் ஊஞ்சல் கட்டப் போகிறார்கள் என்பதே சிறுவர்கள் எங்கள் பந்தயமாக இருக்கும். இதற்காக வீட்டில் பெரியவர்களை நச்சரிக்காத நாள் இல்லை.
ஊஞ்சலுக்கு முக்கியத்தேவைகள்
நல்ல மரம் குறைந்த பட்சம் மூன்றிலிருந்து ஐந்தடி தூரம் தண்டிலிருந்து தள்ளியிருக்கும் வலுவான கிளை அவசியம்.
ஓரு நல்ல கயிறு. வடம் என்றால் உறுதியாக இருக்கும்
நூல் சாக்கு (கோணி) கயிற்றை கிளையில் கட்டும் போது உராய்ந்து கயிறு அறுபடுவதைத் தவிர்க்க கயிற்றுக்கும் கிளைக்கும் இடையில் உராய்வு நீக்கியாகப் பயன்படும்.
குறுக்குக் கம்பு. பலகைகளுக்குப் பதிலாகப் பயன்படுத்தப் படுவது. கிராமங்களில் பெரும்பாலும் உலக்கை.
எங்கள் வீடு கட்டுவதற்கு முன்னால் எஙகள் நிலத்தில் நடுநாயகமாக நின்று கொண்டிருந்த பெரிய வேப்பமரம் தான் எங்கள் ஊஞ்சல் களம். தாத்தா விடம் பெரிய வடம் இருக்கும். வருடம் முழுவதும் காணாமல் போகும் வடம் மிகச் சரியாக ஊஞ்சல் காலத்தில் வெளிவந்து விடும். 75 வயதிலும் மரத்தின் மீது ஏறி ஊஞ்சல் போட்டுக் கொடுப்பார்.
ஊஞ்சல் போட்டாச்சு என்றாலே கொண்டாட்டம் தான். பள்ளி இறுதி மணி ஒலித்து முடிக்கையில் புத்தகப் பையை வீட்டில் எறிந்து விட்டு ஒரே ஓட்டமாக ஓடுவது வேப்பமரத்தடிக்குத் தான்.
அண்ணன்களுக்கு முன்னால் ஓடிச் சென்று ஒரு முறையாவது ஆடிவிடவேண்டும். அவன்கள் வந்து விட்டால் அப்புறம் ஆடுவது முடியாது என்பதால் இந்த மராத்தான் தினசரி நடக்கும்.
விளையின் வாயிலில் நுழையும் போதே மரத்து மூட்டில் யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டபின் ஓட்டத்தைச் சற்று நிதானப்படுத்தி ஓடிச்சென்று முடிச்சை அவிழ்த்து நமது உயரத்திற்கு உலக்கையை சரிப்படுத்தி மறுபடி முடிச்சிட்டு ஏறி அமரப் போகும் வேளையில்
விளிச் சென்று காலில் புளிய மிலாறு அடி விழும்.
திரும்பிப் பார்த்தால் அம்மா புளியமிலாறோடு நின்று கொண்டிருப்பார்கள். அப்புறம் பள்ளிகொடத்துக்குப் போய்ட்டு வந்து புக்க வெளிய வாசல்லருந்தே தூக்கி உள்ளப் போட்டுட்டு, துணி ஏதும் மாத்தாம சீருடையோடவே வெளையாட வந்தா…
"யய்யா… யம்மா…" னு கத்திகிட்டே ஓடிப்போய் புத்தகத்த எடுத்து ஒழுங்கா வச்சிட்டு துணிய மாத்திட்டு திரும்பி வந்து பார்த்தா... ஒரு கும்பலே அங்க சண்ட போட்டுட்டுருக்கும்.
அவ்வளவுதான் இன்னிக்கி குஞ்சாலம் ஆடுனாப்பிலதாண்ணு ஒரு ஓரத்தில போய் உக்காந்துக்க வேண்டியது.
இந்தக் கோஷ்டில முத்தவன் செய்ற அலப்பற இருக்கே… எல்லாரையும் முறை போட்டு இவனுக்கடுத்தது தான் யாருண்ணாலும் ஆடனும். இவன் மட்டும் தனியா ஆடுவான் மத்த எல்லாரும் மூணு மூணு பேரா ஆடணும்…
எந்த ஊரு ஞாயம் இதுனு மனசு கேக்கும் வெளிய சொல்ல முடியாது. சொன்னா அப்புறம் மூணு பேரு கூட ஆடுற வாய்ப்பு கூட கெடைக்காது.
வீட்டுல வந்து சொன்னா "உன்ன யாரு அங்க போவச் சொன்னது? நாளக்கி படிப்பு உண்டுல்ல போய் படின்னு பதில் வரும்".
படிக்கிறதா?
இந்தக் கொள்ளக்கி அங்கப் போயி மூணு பேரு என்ன அஞ்சிபேரு சேந்து கூட ஆடலாமே. ஆடக்கூட வேணாம் சும்மாப் பாத்துட்டாவது இருக்கலாமே.
ஊஞ்சல் ஆடுறது ஒருத்தர் மட்டும் ஆடலாம் ரெண்டு பேரு சேர்ந்து ஆடலாம் மூணுபேரு சேந்து ஆடலாம்.
ஒருத்தர் ஆடும் போது நடுவில உக்காந்துக்கணும். ஊஞ்சல்ல உக்காந்துட்டு ஓரு பக்கமா போய் நின்று காலை எடுக்கும் போது ஊஞ்சல் எதிர்ப்பக்கம் போய் உயர்ந்து பின் கீழிறங்கி நாம் நின்ற பக்கம் உயரேப் போகும்போது மிகச்சரியாக நமது கால் உயரம் தாண்டும் போது பாத நுனியால் லேசாக ஊன்றி எத்தினால் இன்னும் வேகமெடுத்து ஆட ஆரம்பிக்கும். இப்படி ஒவ்வொரு முறை இந்தப் பக்கம் வரும் போதும் காலை ஊன்றி ஊன்றி சாவகாசமாக ஆடிக் கொண்டிருக்கலாம்.
இந்த மூத்தவன் இருக்கானே அவன் ஆடி முடிச்சாச்சிண்ணா உலக்கைய அவன் உயரத்துக்கு மாத்திட்டு அப்படியே போட்டுட்டு போயிடுவான். பெரிய பெரிய முடிச்சு போட்டுஅதை அவுக்கவும் தெரியாது என்ன செய்றது அதுக்கும் வழி வச்சிருப்போம்ல நாம.
உலக்கைல ஒரு கையும் கயிற்றுல ஒருகையும் புடிச்சிட்டு வெறும் ஊஞ்சல தள்ளிகிட்டே ஒரு பக்கமா உயரத்துக்கு கொண்டு போறது. அப்படியே பின்பக்கமா ஓடிய படியே இந்தப்பக்கம் கொண்டு வரது இப்படியே மாத்தி மாத்தி ஓடி ஓரளவுக்கு வேகம் வந்ததும். ஒரு பக்கம் உயரத்திலருந்து வரும்போது தாவி ஏறி உக்காந்திடுறது.
இப்படி ஏறி உக்காந்திட்டு காலால ஊன்றி ஆட முடியாது தரை எட்டாது. இந்த மாதிரி நேரத்தில வடத்தைப் பிடிச்சிகிட்டே உலக்கைல ஏறி நின்றபடி ஊஞ்சல் நடுவில் வரும்போது குனிந்து ஒவ்வொரு பக்கம் உயரத்தில் போகும் போது கால்களால் உலக்கையை இன்னும் உயரத்தில் தள்ளவேண்டும் இப்படித் தள்ளும் போது மெல்ல மெல்ல ஊஞ்சல் அசுரவேகமெடுக்கும் அதே நேரத்தில் நல்ல உயரத்திற்குச் செல்லும் அப்படியே அந்தரத்தில் பறப்பது போல் இருக்கும். கைகள் பிடி வலுவாகவும் கவனமாகவும் இல்லை என்றால் தவறி விழும் அபாயம் அதிகம். அதே போன்று சரியான முறையில் செலுத்தவில்லை என்றால் ஊஞ்சல் திசை மாறி மரத்திலோ அல்லது கிளைகளிலோ முட்டிக் கொள்ளும் அபாயம் உண்டு. இந்த முறைக்குப் பேரு தெண்டல் வெட்டு. (பேருக்கு விளக்கம் எல்லாம் கேக்க கூடாது)
இரண்டு பேர் ஆடும் போது இருவரும் ஒரே பக்கம் பார்த்தபடி அமர்ந்து சேர்ந்தார் போல் கால்களை உதைத்து ஆடவேண்டும். மாற்றி மாற்றி அமர்ந்தாலோ அல்லது உதைத்தாலோ ஊஞ்சல் சுற்றவாரம்பித்து விடும்.
மூன்று பேர் ஆடும் போது இன்னும் சுவாரசியமாக இருக்கும். இருவர் ஒரே பக்கமாகப் பார்த்தபடி இரண்டு ஓரங்களிலும் அமர்ந்திருக்க ஒருவர் மறுபக்கம் பார்த்தபடி நடுவில் அமர்ந்து கொள்ள வேண்டும் இதனால் ஊஞ்சல் இருமுனைகளுக்குச் செல்லும் போதும் உந்தித் தள்ள முடியும். ஒவ்வொரு வரும் அவர்கள் அமர்ந்திருக்கும் பக்கத்திற்கு எதிர்ப்பக்கத்தில் ஊஞ்சல் வரும்போது உந்தித் தள்ள வேண்டும்.
இதில் நடுவிலிருப்பவர் முதலில் ஊஞ்சலை தள்ளிவிட்டு அந்த வேகத்திலேயே ஏறிக் கொள்ளலாம்.
ஊஞ்சலை யாராவது தள்ளச் சொல்லிவிட்டு கண்களை மூடியபடி முகத்திலறையும் காற்றை இரசித்தபடியே ஆடும் போது கிடைக்கும் பறப்பது போன்ற உணர்வு இருக்கிறதே…
அனுபவித்தால் தான் புரியும்.
ஊஞ்சலாட்டம் ஒரு பொழுது போக்கு விளையாட்டாக மட்டுமல்லாமல் அது ஒரு கொண்டாட்டமாகவே இருந்திருக்கிறது.
ஊஞ்சலாடும் போது பாடுவதற்கென்றே தனிப் பாடல்கள் இருந்திருக்கின்றன.
உதாரணத்திற்கு ஒன்று.
ஏல ஏலோ ஏலேலோ.... ஏல ஏலோ ஏலலோ......
ஏல ஏலோ ஏலேலோ....... ஏல ஏல ஏலலோ........
நடுசாம ஏலேலோ........ வேளையிலே ஏலேலோ..
நடந்து போனார் ஏலேலோ.... அயல் தேசம் ஏலேலோ…
இந்த இராகத்தில் களியல் பாடல்கள் உள்ளன. ஆனால் இது போன்ற பல பாடல்களைப் பாட்டிகள் பாடுவார்கள். சிறுவயதில் கேட்டவை மறந்து விட்டது. இந்த ஒரு பாடல் மட்டும் களியலோடு சேர்ந்த பாடல் என்பதால் நினைவில் இருக்கிறது.
களியலாட்டத்தின் இந்தப் பாடலின் ஆட்டமுறையும் ஊஞ்சலாடுவது போன்றே அமைக்கப் பட்டிருக்கும்.
ஞாயிறு மற்றும் பண்டிகை நாட்களில் குடும்பமே மர நிழலில் அமர்ந்தபடி ஊஞ்சலாடுவது ஊஞ்சலாட்டத்தை கண்டுகளித்தபடி பல விதவிளையாட்டுக்களும் நடைபெறும்.
அது ஒரு குடும்ப பகிர்வாகவே இருக்கும். ஊஞ்சலில் நிகழும் காதல் குறும்புகளும். தள்ளி விடு மாமா என்றும் மச்சான் என்றும் களித்துக்கிடக்க மக்களின் வாழ்வில் ஒரு கொண்டாட்டமாகவே திகழ்ந்தது இந்த ஊஞ்சல். பல நேரங்களில் சாப்பாட்டுப் பானைகளும் ஊஞ்சல் களத்திற்கு வந்து விடும்.
பெரியவர்களை ஆடச் சொல்லி கயிறு அறுந்து விழுந்து பலகை உடைந்து விழுந்து அதை வைத்து கேலி செய்து சிரிக்க சிரிக்கப் பேசி.. கேலியும் கிண்டலுமாய் எத்தனை கவலைகள் இருந்தாலும் மறக்கச் செய்யும் அருமருந்து ஊஞ்சல்.
வாழ்க்கையின் கொண்டாட்டமான விளையாட்டுகளில் ஒன்று ஊஞ்சல் என்பது மிகையல்ல.
Elle, Taif pooi additu irunthiye,innum markaliya, Taif poka asaiya, illa oruku poi unjal ada asaya..
பதிலளிநீக்குv.good. nala malrum ninivukal.. apudiye meen pudika ponatha pathi solla lame..
urs JJP