இக் குழந்தைகளின் பிறப்பிடம்

வெள்ளி, 26 பிப்ரவரி, 2010

கனவின் பொருள் தேடி........!

கனல் பறக்கும் கடும் பாலை
நடுவிலே நான்
கானலும் மணலும் தவிர
கடுகளவும் நீரில்லைச் சுற்றிலும்
என்னைத் தவிர உயிரெதுவும்
இருப்பதுவும் தெரியவில்லை
இமைகளை விரிக்க முடியாதபடி
சுற்றிலும் சூரியனின் ஒளிவெள்ளம்

சுட்டெரித்த சூரியன் திடுமென மறைகிறான்....
பனிபொழிந்து முழுக்க பனிப்பாலையானது
மண்பாலை முழுவதும் வெண்பாலையானது
முழுநிலா... ஒளிவெள்ளம் பொழிய
வெள்ளை உலகிலே
விழி விரியப் பார்த்தபடி நான்...
வெண்மை வெண்மை வெண்மை.....
எங்கும் எதிலும்....

வெண்மைக்குப் பங்கம் வந்திடக்கூடாதென்று
நட்சத்திரங்களும் நகர்ந்து விட்டன
வெண்மேகங்களும் தவழ்ந்து தாழ்ந்து
கருவானத்தை மறைத்து விட்டன

குளிர்ந்த தென்றல் இதமாய் என்
குழல் கலைத்தது...
எலும்பினுள் புகுந்த குளிரால் உடலெங்கும் பரவிய
நடுக்கம்....
ஒரு நொடிப் பரவசத்தைக் கொடுத்து நின்றது.
பற்கள் மட்டும்
பக்குவப் படாமல் படபடத்தபடியே...

கண்ணுக்குள் புகுந்த வெள்ளைமழை
கண்ணீர் மழையாய் கரைந்து விடக்கூடாதென
இமைவிரைந்து மூடிய அந்த ஒரு கணத்தில்...

மறுபடியும் விரைந்து வந்தான்
சுட்டெரித்த படியே சூரியன்
கனல் பறக்கும் கடும் பாலை
நடுவிலே நான்
கானலும் மணலும் தவிர
கடுகளவும் நீரில்லைச் சுற்றிலும்
என்னைத் தவிர உயிரெதுவும்
இருப்பதுவும் தெரியவில்லை
இமைகளை விரிக்க முடியாதபடி
-----------------
இல்லை.... இல்லை இப்போது விரிக்க முடிகிறதே....
மெல்ல விரித்து ... சுற்றிலும் பார்த்தேன்....
சன்னலின் சீலையைத் தாண்டி ஒழுகும்
காலைச் சூரியனின் கீற்றுகள்
குளிரூட்டியின் ....லேசான இரைச்சலும்
மிதமான குளிரும்.....

இன்றுவரை
தேடிக் கொண்டிருக்கிறேன் இந்தக்
கனவின் பொருள் என்ன வென்று....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக